கேரள மாநிலம் மூணாறில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை, பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 6 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் மலைச் சரிவில் இருந்த வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனதில், அங்கு வசித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த 80 தொழிலாளர்கள் மண்ணுக்கு அடியில் சிக்கினர்.
அதனைத்தொடர்ந்து, மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டு தொடர் மழைக்கு மத்தியிலும் விடாது கடந்த 10 நாட்களுக்கு மேலாக அங்கு மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 61 சடலங்கள் நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இன்னும் சிலரது உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இடிபாடுகளில் சிக்கிய 12 தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.




