செய்யாறு அருகே கிணற்றில் மூழ்கி இறந்த மகளின் கண்களை பெற்றோர்கள் தானம் செய்த சம்பவம் கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்யாறு:
செய்யாறு தாலுகா தும்பை கிராமத்தைச் சேர்ந்த நாராயணன்( வயது 52). இவர் தற்போது குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறார். நாராயணனிற்கு 3 மகள்கள். மூத்த பெண்ணின் திருமணம் நடக்க உள்ளதால் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சொந்த ஊரான தும்பை கிராமத்துக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.
பெற்றோருடன் சொந்த ஊருக்கு வந்த இளைய மகள் சுதா (19) குளிப்பதற்காக கிராமத்தில் உள்ள கிணற்றில் அமர்ந்து குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார். மகள் இறந்த துக்கம் ஒரு புறம் இருந்த போதிலும், பார்வை இழந்தவர்களுக்கு மகளின் கண் மூலம் பார்வை கொடுக்க முயற்சி செய்து தன்னார்வ அமைப்புக்கு தெரிவித்தார். அதன் பிறகு காஞ்சிபுரம் தனியார் மருத்துமனையினர் சுதாவின் கண்களை தானமாக பெற்று கொண்டனர். இந்த கண் தான நிகழ்வானது செய்யாறு கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.