திருப்பத்தூர் மாவட்டத்தில் உயிரிழந்த தாயின் உடலை பார்ப்பதற்காக மன்றாடிய கொரோனா நோயாளி, பிபிஇ கிட் உடை அணிந்து தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடியை அடுத்த பாப்பாநேரி பகுதியை சேர்ந்தவர் மின்னல் அம்மா.
இவரது மகன் முருகேசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வாணியம்பாடி கொரானா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த மின்னல் அம்மா உயிரிழந்துள்ளார். தாய் இறந்த தகவலை அறிந்த முருகேசன் கடைசியாக தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அங்கிருந்த மருத்துவர்களிடம் மன்றாடி கோரியுள்ளார்.
இதை அறிந்த வருவாய் துறையினர் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக முருகேசனுக்கு பிபிஇ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை அணிவித்து நேற்றிரவு அவரது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த அழைத்து சென்றுள்ளனர்.
தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுத முருகேசன் இறுதி அஞ்சலி செலுத்திய சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், ஆங்காங்கே வீடு முழுவதும் தகரம் அடித்து கொரோனா நோயாளிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் அதிகாரிகளுக்கு மத்தியில், முருகேசன் தனது தாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.