
பெரம்பலூர் மாவட்டத்தில் மரத்தடியில் உட்கார்ந்து மது அருந்தியபோது மின்னல் தாக்கியதில் இரண்டு நபர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோனாரிபாளையம் மலைப்பகுதியில் அங்குள்ள கம்பன் தெரு பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் மது அருந்தியுள்ளனர். கோடைக் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்தநேரத்தில் அங்கேயும் லேசான மழை பெய்துள்ளது.
எனினும் மலையைச் சுற்றி இடி மின்னல் இருந்து வந்தது. மூவரும் மது அருந்திக் கொண்டிருந்த போது அந்த இடத்தில் மின்னல் தாக்கியது. மூன்று பேரும் உடல் எரிந்த நிலையில் கதறி துடித்தனர்.
அதே இடத்தில் விவசாயிகள் சிலர் பணி செய்து கொண்டிருந்தனர். அலறல் சத்தம் கேட்டதும், மூன்று பேரையும் அவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் செல்லதுரை, ராமர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வெங்கடேஷ் என்பவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.



