தமிழகத்தில் 7 ஆம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் , அடுத்த ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் 7 ஆம் கட்ட ஊரடங்கு இன்னும் 2 நாட்களில் முடிவடையுள்ள நிலையில், ஊரடங்கு நீடிக்கப்படுமா? அல்லது புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுமா? என்பது குறித்து தமிழக அரசு முக்கிய முடிவினை எடுக்கவுள்ளது. அதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் இன்று அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் 29 பேர் அடங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள தற்போதைய நிலைப்பாடு குறித்தும், மாவட்டங்களில் உள்ள கொரோனா தொற்றின் வேகம் குறித்தும் முதலில் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் முதலமைச்சர் கலந்தாலோசிக்கிறார். ஒரு வேளை ஊரடங்கு தளர்வு மேலும் அளிக்கும் பட்சத்தில் ஏற்படும் சாதகம் மற்றும் பாதகங்கள் குறித்து விரிவாக கலந்து ஆலோசிக்கப்படவுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் தரும் தகவலின் பேரில்தமிழகத்தில் புதிய அறிவிப்புகள் இன்று வெளியாக அதிகளவில் வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே நூலகங்கள், கிராம கோவில்கள், வழிபாட்டு தலங்கள், அனைத்தும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு தளர்வு நிச்சயம் இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை முடிவுற்றதையடுத்து, 29 பேர் அடங்கிய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே முந்தைய ஊரடங்கு தொடர்பான முடிவுகள் எடுக்கும் போதெல்லாம் சுகாதாரத்துறை அதிகாரிகளின் பரிந்துரைகள் முக்கிய பங்கு வகித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இ-பாஸ் ரத்தா?

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடங்கிய இ-பாஸ் நடைமுறை தற்போதும் அமலில் உள்ளது. ஆனால் தற்போது அனைவரும் எளிதில் கிடைக்கும் வகையில் அமைந்துவிட்டது. இருந்த போதும் பணிக்கு செல்பவர்கள் பொதுப்போக்குவரத்து இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே வேலைக்கு செல்பவர்களின் வசதிக்காக பொதுப்போக்குவரத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இ-பாஸ் முறையினை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துவருகிறது. ஏற்கனவே மத்திய அரசு இ-பாஸ் முறையினை ரத்து செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் அதனை நடைமுறைப் படுத்தியுள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்தக்கட்ட நிலை என்ன? என்று இறுதி முடிவு எட்டப்படும்.




