பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதையும், அதை கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆலோசனை நடத்தினார்.

அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதற்கு பிறகு அமெரிக்காவிற்கு மூன்று நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டன் நகரை வந்தடைந்தார். அங்கு அவருக்கு இந்திய மக்கள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு நலன்கள், இந்தோ பசிபிக் மண்டலத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
மேலும் பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது குறித்தும், அவை இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கும்படி பாகிஸ்தானை கேட்டு கொண்டதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவளித்து வருவது குறித்தும், அதை கண்காணிக்க வேண்டியது குறித்து பிரதமர் மோடி கூறிய ஆலோசனைகளையும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஏற்றுக்கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.




