லெபனானில் வெடித்தது 2,750 மெட்ரிக் டன் எடையிலான அம்மோனியம் நைட்ரேட் எனும் சக்திவாய்ந்த வெடிபொருள் என தகவல் வெளியாகியுள்ளது.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/08/gallerye_050824957_2589361.jpg?resize=600%2C413&ssl=1)
மேற்குஆசிய நாடான லெபானின் தலைநகர் பெய்ரூட் நகரில் உள்ள துறைமுகம் மற்றும் வேர்ஹவுஸ் என இரண்டு இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் பயங்கரமான குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பான வீடியோக்கள் நேற்று முதலே இணையத்தில் அதிகளவில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்ததால் ஏற்பட்ட அதிர்வால் அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. நகரமே புகை மண்டலமாக காட்சியளித்தது. கட்டிடங்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேதமடைந்தன. இதுவரை 78 பேர் பலியானதாகவும், 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என கூறப்படும் நிலையில், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/08/IMG_20200805_092701-1024x683.jpg?resize=1024%2C683&ssl=1)
இந்த விபத்து குறித்து அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் கூறுகையில்,’’ எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் 6 ஆண்டுகளாக 2 ஆயிரத்து 750 ரன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.
இந்த கொடூர விபத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனையை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை’’ என்றார்.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/08/998b7ea743dd4db09760e44e3b7baee9_18-1.jpg?resize=583%2C325&ssl=1)
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது, லெபனானில் இது போன்ற மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்ததில்லை. இந்த மோசமான தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியது போன்று உள்ளது என்றார்.
இதனிடையே, அந்நாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மத்திய அரசு அவசர சேவை எண் மற்றும் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளது.