நடிகை ஜோதிகா இன்று தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை ஜோதிகா 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இந்தி திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகமானார். அதன் பிறகு எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடித்த வாலி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார்.
1999ஆம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் என்னும் திரைப்படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். குறும்பு பார்வை, துறு துறுவென நடிப்பு என ஈர்த்தார் ஜோதிகா. கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, மாதவன், என இவர் இவர் ஜோடி சேராத கதாநாயகர்களே இல்லை.
இவர் நடித்த படங்களில் நம் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
2000 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் குஷி. இதில் விஜயுடன் ஜோடி சேர்ந்தார் ஜோதிகா. குறும்புத்தனத்துடன் பெற்றோர்களால் பாசத்தில் வளர்க்கப்படும் பெண் தன் ஈகோவில் மனதில் உள்ள காதலை மறைத்துக் கொண்டு விஜய்யுடன் மோதுவதும் பின்பு தவிப்பதும் என அழகாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
2001 ஆம் ஆண்டு வெளியான டும் டும் டும் திரைப்படத்தில் கங்கா என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். கிராமத்து குறும்பு பெண்ணாகவும், பிடிக்காமல் மாதவனை திருமணம் செய்து கொள்ள சம்மதிப்பார். பின்பு மாதவன் மீது காதலில் விழும் நேரத்தில் குடும்ப சண்டையினால் திருமணம் நின்று போகும் போது அவர் கண்களில் அந்த ஏமாற்றத்தை அழகாக காட்டியிருப்பார். அதன் பிறகு சென்னையில் மாதவனை பார்ப்பது பழகுவது என ரசிக்க வைத்திருப்பார்.
சூர்யாவுடனான நிஜக்காதலை திரையில் காட்டும் வாய்ப்பாக நினைத்து உருகி உருகி ஜோதிகா நடித்த திரைப்படம் தான் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த காக்க காக்க திரைப்படம். அன்புச்செல்வனின் மீதான மாயாவின் காதல் ஒரு அழகிய கவிதை.
ஜோதிகாவின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம் தான் சந்திரமுகி. ஜோதிகாவால் இப்படியும் நடிக்க முடியுமா என ஆச்சரியப்பட வைத்தார். பொதுவாக பெரிய கதாநாயகர்களுடன் நடிக்கும் போது நாயகிகள் அந்த அளவுக்கு பெயர் பெற மாட்டார்கள். ஆனால் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படத்தில் மொத்த கதையின் முக்கியப்புள்ளியை தன் கைகளில் வைத்து கலக்கி இருப்பார் ஜோதிகா.
கதாநாயகிக்கான கலர் கலர் உடைகள், டூயட் பாடல்கள், ஒப்பனைகள் எதுவும் இல்லாமல், காது கேட்காத வாய் பேச முடியாத பெண்ணாக மொழி திரைப்படத்தில் நடித்திருப்பார். மொத்த திரைப்படத்தையும் தன் மௌனத்தில் தாங்கி வாழ்ந்திருப்பார்.
நடிகர் சூர்யாவை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்த நடிகை ஜோதிகா, தமிழ்நாட்டின் மருமகள் ஆனார். அதன் பிறகு 9 வருடங்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார்.
திருமணத்திற்கு பிறகு பல நடிகைகள் கம் பேக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் பலருக்கு இந்த கம் பேக் எதிர்ப்பார்த்த வெற்றியை கொடுத்ததில்லை. ஆனால் ஜோதிகாவின் 36 வயதினிலே அவருக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது என சொல்லலாம். திருமண ஆகி, பிள்ளைகள் ஒரு வயதிற்கு வந்த பிறகு குடும்ப தலைவிகள் உணரும் ஒரு வெறுமையை இந்த படத்தில் அழகாகி சொல்லி இருப்பார்கள்.
திருமணத்திற்கு பிறகு சில நடிகைகளின் குடும்ப வாழ்க்கை ஒரு பேசு பொருளாகவே உள்ளது. ஆனால் ஜோதிகா வடமாநிலத்தில் பிறந்து அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தென் தமிழகத்தில் திருமணம் செய்து அந்த குடும்ப வாழ்க்கையை இத்தனை அழகாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா எந்த ஒரு பேட்டியிலும் விழா மேடையிலும் தமிழில் மட்டுமே பேசி வருகிறார். நேற்று இன்று அல்லது நாளைய காதலர்கள் கூட தங்கள் காதல் வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் கேள்விக்கு சொல்லும் ஒரே பதில் சூர்யா ஜோதிகா வாழ்க்கையை தான்.
குடும்ப வாழ்க்கையும் கலை வாழ்க்கையையும் சரிநிகர கொண்டு செல்லும் ஜோதிகாவுக்கு செய்தி அலையின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.