லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். இவர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் டாக்டர். தொடர்ந்து இவர் தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். தெலுங்கில் வெளிவந்த கேங் லீடர் படத்தின் மூலமாக பிரபலமான பிரியங்கா மோகன் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ்.கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து திரைப்படம் இன்று அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி வெளியாகியுள்ளது. காலை முதலே ரசிகர்கள் உற்சாகமாக திரையரங்குகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே..எதிர் நீச்சலடி வென்று ஏற்று கொடி” என பதிவு செய்துள்ளார்.
சிவகார்த்திகேயன் இவ்வாறு பதிவு செய்திருப்பதன் மூலம் அவரது திரைப்படம் வெளியாகாமல் தடுக்க சிலர் முயன்று இருப்பார்களோ என்ற கேள்வி எழாமல் இல்லை.