சட்டீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர மழை வெள்ளத்தில், சேதமடைந்த தன் பாடப்புத்தகங்களை பார்த்து கதறி அழும் மாணவிக்கு, பலரும் உதவிகள் செய்து வருகின்றனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் கோமலா என்ற கிராமத்தில், பழங்குடியினத்தைச் சேர்ந்த அஞ்சலி என்ற மாணவி, அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். சட்டீஸ்கர் மாநிலம் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளப் பகுதி என்பதால், அங்குப் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதே பெரிய விஷயமாகக் கருதப்பட்டது.
அஞ்சலி, படிப்பின் மீதுள்ள ஆர்வத்தாலும், நர்ஸ் ஆகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடும், பள்ளிக்கு சென்று படித்து வந்தார். ஆனால், கடந்த 5 நாள்களாக பிஜப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், மாவட்டமே தத்தளித்தது. சிறுமி அஞ்சலி அவரின் பெற்றோர் யாவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
மழை சற்று ஓய்ந்த நிலையில், வீட்டுக்கு வந்த அஞ்சலி, வீடு இடிந்தும், வீட்டிலுள்ள பொருள்கள் அனைத்தும் சேதமடைந்து கிடப்பதையும் பார்த்தார். நேராக உள்ளே சென்ற அவர், தனது பாடப்புத்தகங்களை வைத்திருந்த கூடையைத் திறந்துப் பார்த்ததும் கதறி அழத் தொடங்கி விட்டார். வீட்டின் நிலைக் கண்டு அசராத சிறுமி, பாடப்புத்தகங்களைப் கண்டதும் கதறி அழுததையும், சேதமடைந்த புத்தகங்களைக் கண்ணீரோடு அஞ்சலி எடுக்கும் காட்சியையும், பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர் தனது கேமிராவில் வீடியோவாக பதிவு செய்தார்.
இந்த வீடியோவைப் பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர், அஞ்சலிக்கு உதவிடக் கோரி ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அஞ்சலிக்கு உதவிட நடவடிக்கை எடுக்கும்படி, சட்டீஸ்கர் மாநில முதல்வர் புபேஷ் பாஜிஹெல் பிஜப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தவிட்டார். அஞ்சலியின் வீட்டை சீரமைக்க 1.1 லட்ச ரூபாய் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. நர்ஸிங் கல்லூரியில் சேர்ந்து படிக்கவும் உதவி அளிக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி அளித்துள்ளது. இதைக் கண்ட பலரும், அஞ்சலிக்கு ஆதரவும், ஆறுதலும் அளித்து வருகின்றனர்.
இந்த வீடியோவைக் கண்ட நடிகர் சோனு சூட்டும் , ‟கண்ணீரைத் துடையுங்கள் சகோதரி. உங்கள் வீடு, புத்தகம் எல்லாமே புதியதாக கிடைக்கும்” என்று ஆறுதல் கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே, அஞ்சலிக்கு எல்லாமே புதியதாக கிடைத்தும் விட்டது.
அஞ்சலியின் கனவு நிஜமாக வாழ்த்துக்கள் என அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்!! வருங்கால நர்ஸ் அஞ்சலிக்கு வாழ்த்துக்கள்!!