செக்ஸ் மாத்திரைக்கு ஆசைப்பட்டு இணையக் கொள்ளை கும்பலால் ரூ.2.17 லட்சத்தை இழந்த நபர் பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆட்டோ டிரைவரான அவரை செல்போனில் அழைத்த நபர்கள் செக்ஸ் மாத்திரையை வாங்குவதற்கான கூப்பனை வென்றுவிட்டதாகவும், அதற்கான வரியை செலுத்தினால் பணத்துடன் கூடிய மாத்திரைகள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். செக்ஸ் மாத்திரைகளுடன் பணமும் சேர்த்து கிடைக்கப் போகிறது என நம்பிய அந்த டிரைவரிடம், இணையக் கொள்ளையர்கள் சுமார் 2.17 லட்சம் ரூபாயை களவாடியுள்ளனர். டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப, நாளுக்கு நாள் இணையக் கொள்ளையும் அதிகரித்து வருகிறது.
கர்நாடக மாநிலம், பெங்களுரு நகரை ஒட்டிய பெலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர். அவரது செல்போனுக்கு அழைத்த மர்ம நபர்கள் காமசூத்திரா செக்ஸ் கோல்டு மெடிசனை டிரைவர் வென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்த மாத்திரையின் விலை பல லட்சம் ரூபாய் என கதையளந்த மர்மநபர்கள் அதனுடன் மிகப்பெரிய தொகை ஒன்றையும் வழங்குவதாக நம்பிக்கைக்குரிய வார்த்தைகளில் பேசியுள்ளனர். இரண்டு வெவ்வேறு தொலைபேசி எண்களில் இருந்து ஆட்டோ டிரைவரை தொடர்பு கொண்ட நபர்கள், அவரை தங்களது சூட்ச திட்டத்தில் விழ வைத்துள்ளனர். அதாவது, அந்த தொகை மற்றும் மாத்திரைகளை பெற வேண்டுமென்றால் வரியாக (Tax) சில லட்சம் ரூபாயை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
ஆட்டோ டிரைவர், இணையக் கொள்ளையர்கள் கேட்ட தொகையை அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். 2.17 லட்சம் ரூபாய் வரை அனுப்பிய அவருக்கு, செல்போனில் கூறியதுபோல் காமசூத்திரா செக்ஸ் கோல்டு மெடிசன் மற்றும் பணம் ஆகியவை வரவில்லை. ஒரு சில நாட்களுக்குப் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த டிரைவர், அருகில் இருந்த CEN காவல்நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், இணையக் கொள்ளை தொடர்பான சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்து டிரைவரை ஏமாற்றிய நபர்களை தேடி வருகின்றனர்.