சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையால் விவசாயம் பாதிக்கப்படக்கூடாது என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், த.மா.க. தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் சூழலியல் தாக்கம் மதிப்பீட்டுச் சட்டம் மத்திய அரசால் 2006-ல் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தில் பல திருத்தங்கள் செய்து, சூழலியல் தாக்க மதிப்பீட்டு மசோதா 2020 என்ற புதிய மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
இப்புதிய மசோதாவை நிறைவேற்றும் முன்பு, கீழ்காணும் அம்சங்களை சுற்றுச் சூழல் அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. வேளான் நிலங்கள், காடுகள், நீர்நிலைகள், மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது. நில ஆக்கிரமிப்புக்கு முன்பு மக்கள் கருத்தை அறிய வேண்டும். “சுற்றுச் சூழல் ஆர்வலர் குழு” மற்றும் மாநில அரசின் கருத்தையும் பெறவேண்டும். புதிய மசோதாவில் மேற்கொள்ள இருக்கும் திருத்தங்களால் இயற்கை வளம் பாதிக்கப்படக் கூடாது. மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது. மேற்கண்ட பாதுகாப்பு அம்சங்களை வரைவு சட்டத் திருத்தத்தில் சேர்ப்பதற்கு, ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தை ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.