அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக, மூச்சுவிட சிரமப்பட்டு வருவதாக தனுஷ், சிம்பு பட ஹீரோயின் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரிச்சா கங்கோபத்யாய். தெலுங்கில் ராணா நடித்த லீடர் படம் மூலம் நடிகையான இவர், அதைத் தொடர்ந்து தமிழுக்கு வந்தார்.
இதையடுத்து, மேலும் சில தெலுங்கு படங்களில் நடித்த ரிச்சா, நடிப்பதை திடீரென நிறுத்தி விட்டு அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தார். கல்லூரியில் தன்னுடன் படித்த சக மாணவரான ஜோ லாங்கெல்லா என்பவரைக் காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாயின.
கணவருடன் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரில் வசித்து வருகிறார், ரிச்சா. கொரோனா லாக்டவுன் நேரத்திலும் கணவருடன் பிக்னிக் சென்றிருந்த அவர் அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் வசிக்கும் பகுதியில் காட்டுத்தீ பரவி உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.
மக்கள் சரியாக சுவாசிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் இருந்து வருகின்றனர். இதுபற்றி நடிகை ரிச்சா ட்விட்டரில், ‘இங்கு காற்றின் தரம் மிகவும் மோசமாகிவிட்டது. புகை எங்கள் வீட்டுக்குள்ளும் வந்துவிட்டது.
எல்லா பகுதியில் ஏர் பியூரிபையர்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இந்தப் புகையால் ஏற்படும் தலைவலிக்கு எதிராக போராடி வருகிறோம்’ என்று கூறியுள்ளார். இந்நிலையில் அந்தப் புகையில் இருந்து தப்பிப்பதற்காக, புதுவிதமான மாஸ்க்கை அவர் அணிந்துள்ளார். அந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.