தேசிய ஊட்டச்சத்து வாரம், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1 முதல் 7 வரை, ஒரு வாரமளவும் கொண்டாடப்படுகிறது.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதை வலியுறுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 7 வரை, தேசிய ஊட்டச்சத்து வாரம் அனுசரிக்கப்படுகிறது. தேசிய ஊட்டச்சத்து வாரம், மனித உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தையும், பங்கையும் வலியுறுத்துகிறது. நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, நாம் அன்றாடம் உட்கொள்ள வேண்டிய சரியான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உணவுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவே தேசிய ஊட்டச்சத்து வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
தேசிய ஊட்டச்சத்து வாரம், ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு தலைப்பின் (தீம்) கீழ் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான தீம் “Eat Right, Bite by Bite” என்பதாகும்.
தேசிய ஊட்டச்சத்து வாரம், 1973-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அமெரிக்க ஊட்டச்சத்து சங்கத்தின் (இப்போது, அகாடமி ஆஃப் நியூட்ரிஷன் அண்ட் டயட்டெடிக்ஸ்) உறுப்பினர்களால், ஊட்டச்சத்து கல்வியின் முக்கியத்துவம் மற்றும் தேவைக் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக துவங்கப்பட்டது. அந்தக் காலக் கட்டத்தில், தேசிய ஊட்டச்சத்து வாரத்திற்கு, மக்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், 1980-ஆம் ஆண்டில், மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இறுதியாக, 1982-ஆம் ஆண்டில், இந்திய மத்திய அரசு, இந்த இயக்கத்தை ஸ்தாபித்து, ஒரு வாரம் முழுவதும், தேசிய ஊட்டச்சத்து வாரமாகக் கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, தேசிய ஊட்டச்சத்து வாரம், இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால், உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தால், ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது.
நல்ல ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம்
- நம்முடைய வாழ்க்கை முறையை நிர்வகிக்க, ஆற்றலை வழங்குகிறது.
- ஆரோக்கியமாக உடலை பராமரிக்கிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
- நாட்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
- ஆரோக்கியமான உணவு, ஆயுட்காலத்தை அதிகரிக்கிறது.
ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு, பெற்றோர்கள் செய்ய வேண்டியவை
- முதலாவது, பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும், பெற்றோர்கள் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
- நாம் சப்பிடும் சாப்பாட்டை வீணடிக்கக் கூடாது என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும். நாமும் அதைக் கடைபிடிக்க வேண்டும்.
- குழந்தைகளைக் கடைகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். மளிகை சாமான்களை, காய் கறிகளை, பழங்களை வாங்குவதில், அவர்களை ஈடுபடுத்துங்கள்.
- அவ்வாறு செய்யும் போது, தாங்கள் வாங்கி வந்தவைகள சாப்பிட முயற்சிப்பார்கள். இது அவர்களின் ஆர்வத்தை வளர்க்கக்கூடும்.
அனைவரும் நோயில்லாமல், ஆரோக்கியமாகவும், நலமுடனும் வாழ்வோம். குடும்ப ஆரோக்கியத்தைப் பேணுவோம். குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்தின் மகத்துவத்தை எடுத்துக் கூறுவோம்.
இந்த வருடம் ஒரு புதிய உறுதிமொழியை ஏற்போம். நம்மால் முடிந்தவரை, பசியால் வாடுவோர்க்கும் உணவு வழங்கி, அவர்களின் பசியைப் போக்குவோம்.