திமுக வழக்கில் அரசியல் சண்டைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கொரோனா காலத்தில் மத்திய அரசு அறிவித்த கூடுதல் அரிசியை மக்களுக்கு வழங்காமல் முறைகேடாக விற்பனை செய்ததாக குற்றம்சாட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் காமராஜ் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிய வேண்டுமென திமுக தனிக்கைக் குழு உறுப்பினர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பொது ஊழியர்களுக்கு எதிரான புகார்கள் குறித்து விசாரிக்க பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் பெற வேண்டும். தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக நானும், திமுக நிர்வாகிகளும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநருக்கு புகார் அளித்தோம். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் பொதுத்துறை செயலாளர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது என்று அதில் கூறினார்.
புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது. எனவே பொதுத்துறை செயலாளர் ஒப்புதல் பெறும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தினார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுபேற்றுக் கொண்ட சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று (ஜனவரி 4) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்தபோது தலைமை நீதிபதி, அரசியல் சண்டைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது ஏன்? அரசியல் களத்தில் சந்திக்க வேண்டியது தானே? என கேள்வி எழுப்பினார்.
read more: ஸ்டாலினுக்கு தற்போது ஜாதகம் சரியில்லை: அமைச்சர் உதயகுமார்
இதற்கு திமுக தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அரசாணையின் சட்டத்தன்மை குறித்தும், அரசியலமைப்பு சாசன விதிமுறைகள் குறித்தும் தான் வழக்கு தொடரப்பட்டது என பதிலளித்தார். அனைத்து வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சஞ்ஜிப் அமர்வு, இதுகுறித்து ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.




