சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓ.பி.சியினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்த 13 தலைவர்களிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி இதற்கான குழுவை மூன்று மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம், மத்திய – மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களில் முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கக் கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்டு பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா, மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடா, ஓ.ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்- ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் – சந்திரசேகர் ராவ், சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்ரே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோரிடம் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையடுத்து, முக்கிய அரசியல்கட்சித் தலைவர்களை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு கீழ்க்காணும் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரினேன். உடனடியாக, கமிட்டிக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசை வலியுறுத்துவது, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளித்துள்ள மருத்துவ இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது, மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்களைப் பாதுகாக்க வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.