தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்த காரணத்தால், இறப்பு விகிதம் குறைந்து, குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், இதனால், கொரேனா தமிழகத்தில் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறித்து, ஊரடங்கு நிலை குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார். அப்போது,அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அரசின் ஆலோசனையை ஏற்று சிறப்பாக பணியாற்றிய காரணத்தால், இன்றைக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் தமிழகத்தில் தடுக்கப்பட்டு, கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது, இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது. இந்த 4 மாதங்களில் அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. இறப்பு சதவீதம் குறைக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் முழுமையாகக் கிடைக்கக்கூடிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறோம். அரசைப் பொறுத்தவரை, மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் தொய்வில்லாமல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், குடிசை மாற்று வாரிய வீடுகளில் வசிக்கின்ற மக்களுக்கும், குடிசையில் வசிக்கிற மக்களுக்கும் விலையில்லாமல் முகக்கவசம் வழங்கப்பட்டது. மேலும், நாள்தோறும் 500 முதல் 600 வரை காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டன. சென்னை மாநகராட்சியில் மட்டும் ஏறக்குறைய 25,532 காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று முடிந்திருக்கின்றன.
நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக, சென்னையில் கொரோனா தொற்று குறைந்து கொண்டிருக்கிறது. மேலும், சென்னையில் வீடு, வீடாகச் சென்று காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டவர்களை கண்டறிந்து, பரிசோதனைக்குட்படுத்திய பிறகு, உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்படுகின்றது. சென்னையில் மட்டும் ஏறக்குறைய 20,000 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அதேபோல, பிற மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றதால், அதில் ஆயிரக்கணக்கானோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்ற காரணத்தினால் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருக்கின்றன. நடமாடும் மருத்துவமனைகள், சென்னையில் 70, மற்ற மாவட்டங்களில் 1,126 என மொத்தம் 1,196 ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நோய்த் தொற்று அறிகுறி அதிகமாகவுள்ள பகுதிகளுக்கு நடமாடும் மருத்துவமனை சென்று, அந்தப் பகுதியில் இருக்கின்ற மக்களைப் பரிசோதனை செய்து, நோய் அறிகுறி தென்பட்டால் சிகிச்சை அளித்து, நோய்ப் பரவல் தடுக்கப்படுகிறது.
வெளிமாநிலத் தொழிலாளர்களை பரிசோதனை செய்து, அரசின் வழிகாட்டுதல்களின்படி பணியில் அமர்த்திக் கொள்ளலாம் என்ற அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் சிறப்பான முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக இறப்பு சதவிகிதம் குறைக்கப்பட்டிருக்கிறது, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதிகமான பரிசோதனை செய்யப்படுவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. அரசைப் பொறுத்தவரை மக்களின் எண்ணங்களைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது.
தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால், பொழிகின்ற மழைநீர் முழுவதையும் சேமித்து வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டு அவர்கள் இப்பொழுது சிகிச்சையில் இருந்து கொண்டிருக்கின்றனர்.
அதேபோல, உள்ளாட்சித் துறை, காவல் துறை, வருவாய்த் துறை, உணவுத் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இந்தக் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபொழுது, நோய்த் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென்று இறைவனை நான் பிரார்த்திக்கின்றேன்.
அதேபோல, மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மக்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகின்றார்களோ, அந்த அளவுக்குத்தான் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும். இவற்றையெல்லாம் கடைபிடித்தாலே கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவலைத் தடுத்து, நாம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.




