அரசியல் வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால் தான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிசம்பர் 13ஆம் தேதி மதுரையில் தனது பிரச்சாரத்தைத் துவங்கினார். அதன்பிறகு சென்னை மண்டலம், திருச்சி மண்டலம் என பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். தனது பிரச்சாரத்தில் மதுரையை இரண்டாவது தலைநகராக்குவேன், இல்லத்தரசிகளுக்கு ஊதியம், பெண்களுக்கு அமைச்சரவையில் 50 சதவிகித பங்கு, அனைத்து வீடுகளுக்கும் இணையம் என வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது நான்காவது கட்ட பிரச்சாரத்தை கமல்ஹாசன் இன்று மாலை சேலத்தில் துவங்கினார். இதற்காக தனி விமானம் மூலம் சேலம் வந்த கமலுக்கு, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதன்பிறகு பிரச்சாரத்தைத் தொடங்கி பேசிய கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவையில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம உரிமை மற்றும் சம ஊதியம் அளிப்பதே தனது லட்சியம் என்று உறுதியளித்தார்.
read more: ஸ்டாலினால் ஒருபோதும் முதல்வராக வரமுடியாது: மு.க.அழகிரி
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் கல்வி மற்றும் சுகாதாரத்தை அரசே ஏற்று நடத்தும். அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டார். வரும் 6ஆம் தேதி வரை சேலம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் பல இடங்களில் பிரச்சாரம் செய்கிறார் கமல்ஹாசன்.