காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மக்களால் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டும் என மக்கள் கற்பனை கூட செய்து பார்த்திருக்கமாட்டார்கள். சமையல் எரிவாயு விலை ரூ.900, சமையல் எண்ணெய் விலை ரூ.200 -ஐ தாண்டி உள்ளது. விலைவாசி உயர்வு மக்களை தாங்க முடியாத துயரத்தில் தள்ளியுள்ளது.
உட்கட்சி விவகாரம் குறித்து பொது வெளியில் பேசாமல் கட்சித் தலைமையிடம் மூத்த தலைவர்கள் தெரிவிக்க வேண்டும். கட்சித் தலைமையிடம் ஊடகங்கள் வாயிலாக பேசாதீர்கள். எதுவாக இருந்தாலும் நேர்மையான, வெளிப்படையான விவாதத்திற்கு தயாராக இருப்போம் என காங்கிரஸ் மூத்த தலைவரிடம் சோனியா காந்தி கூறினார். கட்சியின் முடிவுகளை கபில் சிபில், குலாம் நபி ஆசாத் ஆகியோர் பொதுவெளியில் விமர்சித்திருந்த நிலையில் சோனியா காந்தி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜக அல்லாத மாநில அரசுகளை மோடி அரசு வஞ்சிப்பதாகவும் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கூட்டாட்சி என்பது வெறும் பேச்சாக மட்டுமே உள்ளது என விமர்சித்தார்.
இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.