தமிழகத்தில் நோயாளிகளின் நலன் கருதி விரைவில் 500 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அந்த மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளிடம் நோய் தாக்கம் குறித்தும், உணவு வழங்கும் முறைகள் குறித்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ பரிசோதனை மையங்கள் உள்ளது என தெரிவித்தார். மத்திய அரசின் ஆயுஷ் திட்டத்தின் கீழ் 100 படுக்கை வசதிகள் கொண்ட சித்த மருத்துவ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
முன்னதாக ஆலங்குடியில் உள்ள அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்ததுடன், அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நலம் விசாரித்தார். தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டார்