கருத்துச்சுதந்திரத்தை சிதைக்கும் வகையில், நடிகர் சூர்யா மீது நடவடிக்கைக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள் விடுள்ளது.
சென்னை:
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :
மாணவ மணிகளின் உயிர்களை மாய்க்கும் மனு நீதி அடிப்படையிலான நீட் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் ஒருவர் தலைமை நீதியரசருக்கு கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது.
கொரோனா காலத்தில் நீதிமன்ற நடவடிக்கைகள் காணொலியில் நடைபெற்று வரும் சூழலில் நீட் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளது நியாயமா..? என்று நடிகர் சூர்யா குறிப்பிட்டுள்ளது நீதிமன்ற அவமதிப்பாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்பட்டால் அது அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாகவே அமையும்.
ஓர் எதார்த்த உண்மையை நடிகர் சூர்யா எடுத்துரைத்திருப்பது எவ்வாறு நீதித்துறையின் அதிகாரத்தை சிறுமைப்படுத்துவதாக கருத இயலும்?
அரசமைப்புச் சட்டத்தின் 19ம் பிரிவு கருத்துச் சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக பிரகடனம் செய்கிறது. எனவே நடிகர் சூர்யா மீது எவ்வித நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென்று தலைமை நீதியரசரை மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.