கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்டை சென்னையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகமெங்கும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க பல முன்னணி நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ரஷிய நாடு தாங்கள் உலக அளவில் முதல் நாடாக தடுப்பூசியை பதிவு செய்துவிட்டோம் என கூறி வருகிறது. இந்தியாவிலும் தடுப்பூசி கண்டுபிடிப்பிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு என்னும் தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் அனுமதி இந்தியாவின் புனே சீரம் இன்ஸ்டிடியூட்க்கு வழங்கப்பட்டு சோதனையை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் அனுமதி வழங்கியது. அதனை தொடர்ந்து முதற்கட்ட சோதனை முடிக்கப்பட்டநிலையில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் இரண்டாம் கட்ட மனித பரிசோதனை தொடங்கப்பட உள்ளது.
இந்த பரிசோதனையானது இந்தியாவின் 17 நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ராமச்சந்திரா மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் சென்னை மருத்துவ கல்லூரிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விலை குறைவாகவும் , அனைத்து தரப்பு வயதினருக்கும் பயன்படும் வகையில் ஜெனிரிக் முறையில் மருந்து தயாரிக்க திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.