நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டக்கண்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், கோத்தகிரி அருகே உள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 29-ந் தேதி மட்டக்கண்டி கிராமத்தில் திருமண விழா நடந்தது.திருமண விழாவில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
மணமக்களின் குல வழக்கப்படி மணமகளின் கழுத்தில் தாலி கட்டும் முன், என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என மணமகன் மணப்பெண்ணிடம் 3 முறை கேட்க வேண்டும். 3 முறையும் சம்மதம் என்று சொன்ன பிறகே மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட வேண்டும்.
அதன்படி மணமகளிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று மணமகன் கேட்டார். அவர் 2 முறை கேட்டபோதும் மணமகளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை.மணமகளுக்கு சரியாக கேட்கவில்லை என்று நினைத்த மணமகன், 3-வது முறையாக கொஞ்சம் சத்தமாக என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டபடி மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்றார்.
ஆனால் உடனே மணமகள் உங்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் இல்லை என்று கூறினார். அத்துடன் தாலி கட்ட விடாமல் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ஏன் திருமணம் வேண்டாம் என்று கேட்டனர்.
அப்போது பேசிய மணமகள், நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன் எனவும் ஏற்கனவே அவர் திருமணமானவர். அவருக்கு குழந்தை உள்ளது. எனக்காக அவரின் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டார். அவருடைய குழந்தைக்கு நான்தான் தாயாக இருந்து பராமரிப்பேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன். அவர் எனக்காக காத்து இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்துவிடுவார் என்று கூறி மணமேடையை விட்டு இறங்கினார்.
உடனே அந்த மணப்பெண்ணின் உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றனர் மேலும் அந்த பெண்ணை அவரது உறவினர்கள் தாக்க முயன்றனர் மணமகனை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். அதற்கு அவர், எனது காதலரை தான் நான் கரம் பிடிப்பேன் என்று கூறினார். அதற்கு அங்கிருந்த உறவினர்கள் மணமகனை பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்திலேயே கூறி இருக்கலாமே என்று கேட்டனர்.
அதற்கு அந்த பெண், எனக்கு பேசுவதற்கு யாரும் அனுமதி கொடுக்கவில்லை. ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு, பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு, அவருக்கு துரோகம் செய்ய எனக்கு மனமில்லை. எனவே நான் சென்னையை சேர்ந்த எனது காதலரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார் மேலும் ஒரு மணி நேரத்தில் வருவதாக சொன்ன அவரது காதலன் சம்பவ இடத்துக்கு வரவே இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காட்சியை திருமண விழாவுக்கு வந்திருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டுள்ளார் தற்போது அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது.