நெல்மூட்டைகள் பருவமழையால் பாதிக்கப்பட்டு வருவதால், விவசாயிகளிடம் இருந்து நெல்மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க. அரசின் கடமை அலட்சியப் போக்கினால் கடலூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியிருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. நெல்கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்திருப்பதாக அரசு சொன்னாலும், அவை உரிய வசதிகளுடனும் பாதுகாப்புடனும் இருப்பதில்லை.
கடலூர் மாவட்டத்தில் 22 நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டபோதும், 11 நிலையங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதில் ராஜேந்திரபட்டணம் என்ற இடத்தில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்திற்குச் சுற்றுவட்டார கிராமத்து விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெல்லை மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்த நிலையில், அதனை உடனடியாகக் கொள்முதல் செய்வதற்கு வழியின்றி அங்கேயே அடுக்கி வைக்கச் செய்துள்ளது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்.
அடுக்கி வைக்கப்பட்ட மூட்டைகளை மூடுவதற்கு தார்பாலின், ப்ளாஸ்டிக் ஷீட் போன்றவை போதிய அளவில் இல்லாததாலும், வெறுந்தரையிலேயே மூட்டைகளை அடுக்கியதாலும், அண்மையில் பெய்த கனமழையால், 20ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியுள்ளன. கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் இந்த அவலம் தொடர்கிறது.
200-க்கும் அதிகமான அளவில் அரசு திறந்துள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள் பலவற்றுக்கு நிரந்தரக் கட்டிடம் கிடையாது. கிடங்குகள் அமைக்கப்படவில்லை. போதிய அளவிலான பாதுகாப்பு வசதிகள் இல்லை. மழைநீர் புகாமல் நெல்மூட்டைகளை மூடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதனால் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல்லை சாலையோரத்தில் அடுக்கி வைத்து, கொள்முதல் நிலையத்தின் அழைப்புக்காகக் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர்கிறது.
அதுமட்டுமின்றி, 18% ஈரப்பதத்திற்குள் இருக்கும் நெல்லை மட்டுமே கொள்முதல் செய்யும் வழக்கத்தைத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கடைப்பிடிப்பதால், மழையில் நனைந்த நெல் மூட்டைகளில் ஈரப்பதம் அதிகமாகிவிடுகிறது. அவற்றை நேரடிக் கொள்முதல் நிலையங்களில் எடுப்பதில்லை. விவசாயிகளே அவற்றைக் காயவைத்து, ஈரப்பதம் நீக்கி, கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. பருவமழையால் பாழ்படும் நெல்மூட்டைகளைப் பாதுகாத்து, அவற்றை விரைவாகக் கொள்முதல் செய்து, விவசாயிகளின் வாழ்க்கையையும் நலனையும் உரிய நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்று முதல்வரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.