நெல்லையில், விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து, தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருநெல்வேலி மாவட்டத்தின் தாமிரபரணி பாசனபரப்பில் அமைந்துள்ள கோடைமேலழகியான், நதியுண்ணி மற்றும் கன்னடியன் அணைக்கட்டுகளின் மூலம் பாசன வசதி பெறும் கால்வாய் பகுதிகளில் ஆங்காங்கே உள்ள பயிர்களை காக்கவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைகளுக்காகவும் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று சிறப்பு நிகழ்வாக 5.8.2020 முதல் 14.8.2020 முடிய 10 நாட்களுக்கு 691.20 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். மேற்கண்ட கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலியிலுள்ள கிராமங்களில் பாசனம், கால்நடை மற்றும் பொது மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.