மனித உரிமை மீறல்களுக்கு உடந்தையாக இருந்த சீனாவின் 11 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
2018-ம் ஆண்டு அமெரிக்கா, சீனாவின் பொருட்கள் மீது கூடுதலாக வரி விதித்தது. சீனாவும் பதிலடி கொடுக்கும் விதத்தில் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதித்தது. அன்றிலிருந்து, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வரி விதிப்பில் தொடங்கிய பிரச்சனை வர்த்தகப் போராக உருமாறியது. அதை தீர்த்துக் கொள்ள ஜனவரி 2020-ல் தான் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
வர்த்தகப் போர் முடிந்து சுமூகமாக பிரச்சனைகள் தீர்வதற்குள், கொரோனா வைரஸ் வந்துவிட்டது. கொரோனா வைரஸை சீன வைரஸ் என ட்ரம்ப் சர்வதேச அரங்குகளில் சொல்லி சீனாவை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கினார்.
சீனாவின் எல்லா விவகாரங்களிலும் தன் கருத்தைச் சொல்லத் தொடங்கியது, அமெரிக்கா. சிங் ஜியாங் (Xinjiang) பகுதியில் வாழும் உய்கர் இஸ்லாமியர்கள் விவகாரம், ஹாங்காங் சுதந்திர விவகாரம், மிக முக்கியமாக தென் சீனக் கடல் என எல்லா பிரச்சனைகளிலும், சீனாவுக்கு எதிராகவே அமெரிக்கா நடந்து வருகிறது.
சற்று பொறுமை காத்த சீனா,”அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம்” என கடுமையாக பதில் கொடுக்கத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, அமெரிக்கர்களின் விசா விவகாரங்களில் கூட கை வைத்தது, சீனா.
உலகின் வல்லரசு எனச் சொல்லப்படும் அமெரிக்காவிலேயே 39.61 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1,43,834 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். சுமாராக 18.49 லட்சம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து இருக்கிறார்கள். இதனால் கடும் கோபத்தில் இருக்கிறார், அதிபர் ட்ரம்ப். அதற்கான விளைவுகளை சீனா எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.